GrassField

 

மீனாட்சி அம்மன் ஆலயம்

Page history last edited by Pandian R 1 yr ago

மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வாசலில் உள்ள விநாயகர் சுப்பிரமணியரைத் தாண்டி உள்ளே நுழைகிறோம். ஐரோப்பியர்கள் (இந்துக்கள் அல்லாதவர்) இதற்கு மேல்அனுமதிக்கப்படுவதில்லை. வாயிலைத்தாண்டி உள்பிரகாரத்தில் நுழைகிறோம். உள்பிரகாரத்தின் தெற்கில் திருமலை நாயக்கரின் ஆளுயர சிலை நம்மைக் கவர்கிறது. அதனைத் தாண்டி அதற்குள் உள்ள பிரகாரதில் நுழைகிறோம். அங்கு பெரியபுராணக் காட்சிகள், அறுபத்து மூவர்களின் ஓவியங்களைக் காணலாம். மேல்கூரையில் கூட தாமரை மலர்கள் நிறைந்த ஓவியக்காட்சி உள்ளது. இந்த ஓவியங்களை முதல் தர ஓவியங்கள் என்று கூறமுடியாவிட்டாலும், அதற்கெடுத்துக்கொண்ட உழைப்பு நம்மை பிரம்மிக்க வைக்கிறது. அதையும் தாண்டி மீனாட்சி அம்மன் வீற்றிருக்கும் ஆன்மீகம் ததும்பும் உள்அறைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம்.

 

மீனாட்சியின் இளம் வயது கதை மிகவும் தெய்வீகமாக இருக்கும் அதே நேரத்தில் வீரம் ததும்புவதாகவும் இருக்கிறது. மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனுக்கு வெகு நாட்களாக குழந்தை பிறக்க வில்லை. வாரிசு இல்லாமல் மனம் வருந்திய அந்த மன்னன், பிள்ளை வரம் வேண்டி பல்வேறு யாகங்கள் செய்தான். அந்த யாகத்தீயிலிருந்து மூன்று வயது குழந்தை மீனாட்சி தோன்றியது. ஆனால் அந்தப் பெண்ணிற்கு மூன்று தனங்கள் இருந்ததாக சரித்திரத்தில் சொல்லப்படுகிறது. மன்னன் இதனால் குழப்பமும் பயமும் அடைந்தான். அப்போது ஒரு அசரீரி ஒலி, மீனாட்சி எப்போது தன் துணையைக் காண்கிறாளோ அப்போது அந்தக் குறை காணாமல் போகும் என்று கூறியது.

 

மீனாட்சி மிக செல்வச் செழிப்பான சூழ்நிலையில், வீரமான இளவரசியாக வளரத் தொடங்கினாள். பெற்றோரின் மறைவிற்கு முன்னரே, மிக இளம் வயதில் மதுரையின் அரசியாக செங்கோலோச்சத் தொடங்கினாள். இந்திரன் தவிர அனைத்து தேவர்களிடமும் போர் செய்து அதில் வெற்றி பெற்றாள். இறுதியாக சிவன் மீது போர்செய்ய கைலாயத்திற்குச் சென்றாள். அப்போதிருந்த சூழ்நிலையில், இறைவன் சிவனிடம் தன் மனதைக் கொடுத்தாள். கைலாசத்தில் போருக்காகச் சென்றபோது மீனாட்சி, சிவனைக் கண்டதாக புராணச் செய்திகள் கூறுகின்றன. அவரைக் கண்டதுடன் தன் மூன்றாவது தனம் மறைந்தது. அப்போதுதான் தான் யாருமல்ல, சிவனுடன் ஐக்கியமான பார்வதி தேவி என்பதை உணர்ந்தாள். அதன் பிறகு அவர்களின் அகவாழ்க்கை துவங்குகிறது. அதன் இறுதியாக சிவன் மதுரையின் அரசனாக பூலோகத்திற்கு வருகிறார். மதுரையை சில காலம் ஆண்ட பின் மீனாட்சி அம்மன் கோயிலில் அவர்கள் தெய்வங்களாக ஐக்கியமாகி மதுரையை ஆண்டு வருவதாக ஐதீகம் கூறுகிறது. இந்தச் செய்திகள் அனைத்தும் அஷ்ட சக்தி மண்டபத்தில் சிற்பங்களாக வடிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டள்ளன.

Comments (0)

You don't have permission to comment on this page.